
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் தற்போது புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இத்தொடரை 2 – 0 என்ற கணக்கில் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று சட்டோகிராம் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே நிதானத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சுப்மன் கில் 20 ரன்களில் தவறான ஷாட் அடித்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் பொறுப்புடன் செயல்பட வேண்டிய தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் வழக்கம் போல தடவலாக செயல்பட்டு 22 ரன்களில் போல்ட்டாகி சென்றார்.
போதாகுறைக்கு அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 48/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியா சுமாரான தொடக்கத்தை பெற்றது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த செட்டேஸ்வர் புஜாரா தனக்கே உரித்தான பாணியில் நங்கூரமாக பேட்டிங் செய்த நிலையில் மறுபுறம் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வெளுத்து வாங்கிய ரிசப் பந்த் 4ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டெடுத்த போது 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் அதிரடியாக 46 ரன்களில் அவுட்டானார்.