இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நாளை கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியின் போது இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயமடைந்தார். அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்கும் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அதன்பின் அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறியதுடன், சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், அவரது மண்ணீரலில் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு, தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் ஐசியு-வில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவர் குணமடைந்து வருவதாகவும் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.