
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தனது மோசமான ஃபார்ம் காரணமாக எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த வாய்ப்பு இளம் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க வேண்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கேற்ற வகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, விதர்பா, மும்பை, பரோடா, சௌராஷ்டிரா, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேச அணிகள் முன்னேறி இருந்தன.
மேலும் மும்பை அணி காலிறுதிப்போட்டியில் பரோடா அணியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்நிலையில் முதுகுபிடிப்பு காரணமாக நடப்பு ரஞ்சி கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக ஸ்ரேயாஸ் ஐயர் விலகியது பெரும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. ஏனெனில் சமீபத்தில் தான் இஷான் கிஷான் உள்பட பல முன்னணி வீரர்கள் ரஞ்சி கோப்பை தொடரில் விளையாட மறுத்து ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருவதாக பிசிசிஐ அதிருப்தி தெரிவித்திருந்தது.