
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்கள் பலர் தங்களது திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள ஷுப்மன் கில் இரண்டு அரைசதங்களுடன், 183 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 21 பவுண்டரிகளுடன், 4 சிக்சர்களும் அடங்கும். இந்நிலையில் அடுத்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட் உலகை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஷுப்மன் கில் ஆள்வார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேத்யூ ஹேடன், “இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அனைத்து விதமான போட்டிகளிலும் அவர் அபாரமாக ஆடி வருகிறார். அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்களை விளாசினார். ஒருநாள் போட்டிகளில் 4 சதங்களை அடித்தார். சர்வதேச டி20 போட்டியில் ஒரு சதத்தை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.