ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பை பெறமுடியவில்லை. ஏனெனில் அணியின் முதன்மை கீப்பர் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, ரிஷப் பந்திற்கு பிளேயிங் லெவனில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், வரவிருக்கும் ஐபிஎல் 2025 சீசனில் தனது புதிய உரிமையாளரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ரிஷப் பந்த் வழிநடத்த உள்ளார். கடந்த ஆண்டு மெகா ஏலத்தில் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்ததுடன், அவரை கேப்டனாகவும் நியமித்துள்ளது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், சிறுவயதிலிருந்தே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கனவாக இருந்தது என ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.