
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளமென உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 182 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் 8 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 88 ரன்களைச் சேர்த்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதும் நிஷங்கா தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் 16 ரன்களுக்கும், சதீரா சமரவிக்ரமா 45 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.