
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியானது அபார வெற்றியைப் பதிவுசெய்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று கலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா ஒரு ரன்னிலும், திமுத் கருணரத்னே 46 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய தினேஷ் சண்டிமால் அபாரமான் ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், சர்வதேச டெஸ்ட் கிர்க்கெட்டில் தனது 16ஆவது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
பின்னர் அவரும் 116 ரன்களைச் சேர்த்த நிலையில் தினேஷ் சண்டிமாலும் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் கமிந்து மெண்டிஸ் இணையும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் 306 ரன்களைச் சேர்த்தது. இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாளாட்டத்தை ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களுடன், கமிந்து மெண்டிஸ் 51 ரன்களுடனும் தொடர்ந்தனர்.