முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கையை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முத்தரப்பு இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்து இந்திய மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தியது.
கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் இணை சிறப்பான ஆட்டத்தி வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் இருவரும் முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் பிரதிகா ராவல் 30 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ஹர்லீன் தியோல் ஒருபக்கம் நிதானமாக விளையாட மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மிருதி மந்தனா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 15 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 116 ரன்களைச் சேர்த்த கையோடு மந்தனா விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்லீன் தியோலும் 47 ரன்களில் நடையைக் கட்டினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸும் சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் ஹர்மன்ப்ரீத் கவுர் 41 ரன்களுக்கும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 44 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, ரிச்சா கோஷ் 8 ரன்காளுக்கும் என ஆட்டமிழந்தார். இறுதியில் அமஞ்சோத் கவுர் 18 ரன்களில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தா தீப்தி சர்மா 20 ரன்களையும் சேர்த்தனர். இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மல்கி மதரா, தெவமி விஹங்கா, சுகந்திகா குமாரி உள்ளிட்டோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். பின்னர் இணைந்த விஷ்மி கருணரத்னே - கேப்டன் சமாரி அத்தபத்து இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் விஷ்மி குணரத்னே 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நிலாக்ஷி டி சில்வாவும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் சமாரி அத்தபத்து அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் சமாரி அத்தபத்து 51 ரன்களிலும், நிலாக்ஷி டி சில்வா 48 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் ஹர்ஷிதா சமரவிக்ரமா 26 ரன்களையும், அனுஷ்கா சஞ்சீவானி 28 ரன்களையும், சுகந்திகா குமாரி 27 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டுகளையும், அமஞ்சோத் கௌர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முத்தரப்பு தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகி விருதையும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்நே ரானா தொடர் நாயகி விருதை வென்று அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now