
இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஆனால், கடந்த உலகக் கோப்பை தொடர்களை போன்றே பேட்டிங் வரிசையில் 4ஆவது இடத்தில் களமிறங்கும் வீரரை தேர்வு செய்வதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது.
இந்த இடத்தில் களமிறங்கி ஆடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதி சோதனைக்கான செயல்முறையில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஸ்ரேயஸ் விளையாடாவிட்டால் 4ஆவது இடத்தில் திலக் வர்மாவை களமிறக்கலாம் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “4ஆவது வரிசையில் களமிறங்கக்கூடிய வீரர் நம்மிடம் இல்லை என்று யார் கூறியது?. அந்த இடத்தில் களமிறங்கக்கூடிய ஏராளமான பேட்ஸ்மேன்கள் நம்மிடம் இருக்கிறார்கள். இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் திலக் வர்மாவை ஒரு விருப்பமாக நான் பார்க்கிறேன். இளம் வீரரான அவருக்கு போதுமான அனுபவம் இல்லை தான். ஆனால் அது ஒரு பிரச்சினை இல்லை. இடது கை பேட்ஸ்மேனான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டாப் ஆர்டரில் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்.