
நடப்பு ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் மிகுந்த பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஆனால் அணிகளின் போட்டியால் ஏற்பட்ட பரபரப்பு இது கிடையாது. போட்டியை இலங்கையில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த பிரச்சனைகளால் ஏற்பட்டிருக்கும் பரபரப்பு இது. தற்பொழுது நடப்பு ஆசியக் கோப்பையில் இலங்கையில் முதல் சுற்று போட்டிகளின் போது மழை குறுக்கீட்டால், இந்திய அணி மோதிய இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டது. இது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
இதற்கு அடுத்து இரண்டாவது சுற்று யார் யார் முன்னேறுவார்கள் என்பது குறித்து தெளிவான பார்வை இருக்காது என்பதால், இரண்டாவது சுற்றில் ஒருபோட்டி மட்டுமே பாகிஸ்தானிலும், மீதி போட்டிகள் இலங்கை கொழும்பு மைதானத்தில் நடத்துவதாகவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இடையில் கொழும்புவில் மழை வாய்ப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால் இலங்கையின் மற்றொரு இடமான ஹம்பன்தோட்டாவில் போட்டிகள் நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் திடீரென அந்த முடிவு கைவிடப்பட்டு மீண்டும் கொழும்பு மைதானமே தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பு மைதானத்தில் போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால், இந்தியா - பாகிஸ்தான் செப்டம்பர் 10ஆம் தேதி மோதிக் கொள்ளும் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டது. 10ஆம் தேதி மழையால் போட்டி எந்த இடத்தில் பாதிக்கப்படுகிறதோ, அங்கிருந்து 11ஆம் தேதி தொடங்கி நடைபெறும் என்று சொல்லப்பட்டது. ஒருவேளை அந்த நாளும் மழை வந்தால் போட்டி டிராவில் முடியும். இல்லை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும்.