Advertisement

ஆசிய கோப்பை 2022: பாகிஸ்தானை வீழ்த்தி 6ஆவது முறையாக கோப்பையை வென்றது இலங்கை!

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி 6ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan September 12, 2022 • 06:28 AM
Sri Lanka Thrash Pakistan By 23 Runs To Claim Asia Cup 2022 Title
Sri Lanka Thrash Pakistan By 23 Runs To Claim Asia Cup 2022 Title (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 15ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் டாஸ் வென்று பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 

Trending


அணியின் நட்சத்திர வீரர் குசால் மெண்டிஸ் ரன் ஏதுமின்றி நசீம் ஷா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய பதும் நிஷங்கா, குணத்திலகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய தனஞ்செய டி சில்வா 28 ரன்களோடு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் தசுன் ஷானகா 2 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த பனுகா ராஜபக்ஷா - வநிந்து ஹசரங்கா இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹசரங்கா 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ராஜபக்ஷா 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களைச் சேர்த்துள்ளது. இலங்கை தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பனுகா ராஜபக்ஷா 71 ரன்களைச் சேர்த்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ராவூஃப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அதன்பின் 171 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் ஆசாம்  5, ஃபகர் ஸமான் 0 ஆகிய இருவரையும் மதுஷன் வீழ்த்தினார். அதன்பின்னர் ரிஸ்வானும் இஃப்திகார் அகமதுவும் இணைந்து  பார்ட்னர்ஷிப் அமைத்து 3ஆவது விக்கெட்டுக்கு71 ரன்களை சேர்த்தனர். இதில் இஃப்திகார் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய முகமது நவாஸ் 9 பந்தில் 6 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய முகமது ரிஸ்வான் அரைசதம் அடித்தார். ஆனால் கடைசி 4 ஓவரில் ரன்ரேட் அதிகமாக தேவைப்பட்டதால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் தூக்கி அடித்த ரிஸ்வான் 54 ரன்களில் ஹசரங்காவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்டுகளையும், வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதன்மூலம் இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுடன், 6ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

20 ஓவரில் 147 ரன்கள் அடித்து பாகிஸ்தான் தோற்றது. 23  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 6வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement