
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது.
இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியும் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்திருந்தன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இதையடுத்து வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 22ஆம் தேதி சிலெட்டில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான வங்கதேச அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான நஹித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த தொடருக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வருடம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வநிந்து ஹசரங்கா தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அதன்படி இந்த டெஸ்ட் அணிக்கான கேப்டனாக தனஞ்செயா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.