-mdl.jpg)
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட ஆசிய கண்டத்தின் டாப் 6 அணிகள் பங்கேற்கின்றன. அதற்கான அட்டவணையும் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அதில் கேஎல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி ஓய்வுக்குப் பின் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களுடன் சூர்யகுமார், புவனேஸ்வர் குமார், அர்ஷிதீப் சிங், ரவி பிஷ்னோய் போன்ற சமீபத்திய டி20 தொடர்களில் அசத்திய அனுபவம் வீரர்களும் இளம் வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் படேல் ஆகியோர் காயத்தால் வெளியேறியுள்ளனர். இந்த அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் சமீப காலங்களில் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக மாறியதால் இந்திய கிரிகெட் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் டி20 கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் கடினமான முயற்சிகளையும் பயிற்சிகளையும் எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக அதிரடியாக 330 ரன்கள் 183.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி தன்னை சிறந்த பினிஷராக நிரூபித்தார். அதன் காரணமாக 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்து அவர் தென் ஆப்ரிக்க தொடரில் அசத்தலாக செயல்பட்டு சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரிலும் முதல் போட்டியில் 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.