
16ஆவது ஐபிஎல் தொடரில், குஜராத் அணியுடனான முதல் போட்டியிலேயே தோல்வியடைந்து, தோல்வியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரை தொடங்கின. பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணியால் இந்த முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கே தகுதி பெற முடியாது என்பதே பல கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதி போட்டிக்கும் தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங்கில் கடுமையாக சொதப்பினாலும், ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் நம்பிக்கையான பேட்டிங்கால், கடைசி பந்து வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5ஆவது முறையாக ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பறியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த மிரட்டல் கிரிக்கெட் வட்டாரத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் சென்னை அணியின் வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.