
இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், நடப்பு சீசனின் இரண்டாவது வெற்றியையும் பெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் அபார ஆட்டத்தின் மூலமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 83 ரன்களைச் சேர்த்திருந்தார். அவரைத் தவிர்த்து கேமரூன் க்ரீன் 33 ரன்களை எடுத்தார்.
இதையடுத்து விளையாடிய கேகேஆர் அணியில் சுனில் நரைன் 47 ரன்களையும், வெங்கடேஷ் ஐயர் 50 ரன்களையும், பில் சால்ட் 30 ரன்களையும் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்களை எடுத்ததுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் கேகேஆர் அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.