
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.அந்தவகையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. முன்னதாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. அதனால் டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், இப்போட்டிக்கான அணியின் தொடக்க வீரர்கள் யார் யார் என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடருக்கான இந்திய அணியின் இரண்டாவது தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் தான். இத்தொடரில் அவர் அணியின் தொடக்க வீரராகவே விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.