
ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரையும் வென்று சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலகக் கோப்பையில் களமிறங்குவதற்கு தயாராகியுள்ளது. முன்னதாக இத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டது ஒரு தரப்பு ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் அளவுக்கு எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் 360 டிகிரியிலும் அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவிக்கும் அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக உருவெடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கிறார். ஆனால் சற்று பொறுமையுடன் விளையாட வேண்டிய ஒருநாள் கிரிக்கெட்டில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் அவர் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்டன் டக் அவுட்டாகி மோசமான உலக சாதனை படைத்தார்.
இருப்பினும் அணி நிர்வாகத்தின் ஆதரவால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் 50, 72 ரன்கள் விளாசிய அவர் ஃபார்முக்கு திரும்பி ஒருநாள் கிரிக்கெட்டிலும் தம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டினார். அதிலும் கடைசிக்கட்ட ஓவர்களில் வெளுத்து வாங்கிய அவர் 2023 உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் முதல் வீரராக விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் சமீபத்தில் கோரிக்கை வைத்தார்.