
இந்தியாவில் தற்போது ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.
இந்த தொடரின் முதல் ஆட்டம் வரும் 23ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 2ஆவது ஆட்டம் 26ஆம் தேதி திருவனந்தபுரத்திலும், 3ஆவது ஆட்டம் 28ஆம் தேதி கவுகாத்தியிலும், 4ஆவது டி20 ஆட்டம் டிசம்பர் 1ஆம் தேதி நாக்பூரிலும், 5ஆவது டி20 ஆட்டம் டிசம்பர் 3ஆம் தேதி ஐதராபாத்திலும் நடைபெற உள்ளது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறினார். அவரது காயம் முழுமையாக குணமடைவதற்கும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு தயாராகும் பொருட்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.