
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் இன்று செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைக் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 92 ரன்களைச் சேர்த்தார்.
மேற்கொண்டு சூர்யகுமார் யாதவ் 31 ரன்களையும், ஷிவம் தூபே 28 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 27 ரன்களையும் சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் டேவிட் வார்னர் 6 ரன்களை மட்டுமே எடுத்து முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் இணைந்த டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் மிட்செல் மார்ஷ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் இணைந்து அபாரமானா ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த மிட்செல் மார்ஷ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 37 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தர்.