1-mdl.jpg)
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேச மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நேபாள் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்த வெற்றியானது மிகவும் முக்கியம் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொண்டது.
செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 4 ரன்களுடன் நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷாகிப் அல் ஹசன் மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
ஆனால் தாவ்ஹித் ஹிரிடோய் 9 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லாவும் 17 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதுவரை தாக்குப்பிடித்து விளையாடி வந்த ஷாகிப் அல் ஹசனும் 17 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜகார் அலி 12 ரன்களையும், ரிஷாத் ஹொசைன் 13 ரன்களையும், தஸ்கின் அஹ்மத் 12 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக வங்கதேச அணியானது 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.