-mdl.jpg)
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 32ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் டி20 சுற்றில் இடம்பிடித்திருந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. செயின்ட் வின்செண்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் டி காக் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் ஐடன் மார்க்ரம் 15 ரன்களுக்கும், ஹென்றிச் கிளாசென் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து குஷால் புர்டெல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதேசமயம் மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ரீஸா ஹென்றிக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லர் 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் வந்த மார்கோ ஜான்சனும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினாலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 27 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 7 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. நேபாள் அணி தரப்பில் குஷால் புர்டெல் 4 விக்கெட்டுகளையும், தீபேந்திர சிங் ஐரி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.