
டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 12 சுற்றில் நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் பாகிஸ்தானும் தங்கள் முதல் போட்டியில் மோதுகின்றனர். இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாமின் தலைமையிலும் மோதுகின்றன.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்டத்திற்கு முன்பாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் அணியுடன் மோதுவது மிகவும் சவாலானது. பாகிஸ்தான் அணியில் அனைவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்களின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருப்பதை அறிந்தே வைத்துள்ளோம். எங்கள் பேட்ஸ் மேன்கள் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்.
எங்களுக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் முக்கியமானதாக இருக்கும், பீல்டிங்கும் சிறப்பானதாகவே இருக்கும். ஆடும் லெவன் போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பே தெரியும். இந்திய அணியில் உள்ள 15 வீரர்களும் நல்ல உடல் நிலையில் போட்டிக்கு தயாராக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.