எனது அதிரடிக்கு காரணம் ஐபிஎல் தான் - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தான் தம்முடைய முரட்டுத்தனமான பேட்டிங்க்கு காரணமென்று மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
![Bharathi Kannan Bharathi Kannan](https://img.cricketnmore.com/uploads/2021/03/bk.jpg)
![T20 World Cup: IPL has changed my cricket, helped me evolve, says Marcus Stoinis T20 World Cup: IPL has changed my cricket, helped me evolve, says Marcus Stoinis](https://img.cricketnmore.com/uploads/2022/10/stoinis-vs-sri-lanka2-lg.jpg)
ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் ஆஸ்திரேலியா தன்னுடைய முதல் போட்டியிலேயே நியூசிலாந்திடம் படுதோல்வியை சந்தித்து மண்ணை கவ்வியது. அதனால் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அக்டோபர் 25ஆம் தேதியன்று ஆசிய சாம்பியன் இலங்கையை எதிர்கொண்ட அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியைப் பெற்றது.
பெர்த் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயித்த 158 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 11, மிட்செல் மார்ஷ் 18 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். ஆனால் அவர்களை விட கேப்டன் ஆரோன் பின்ச் அவுட்டாகாமலேயே 31 ரன்களுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி தோல்வியை நோக்கி அழைத்துச் சென்றார்.
Trending
அப்போது களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக 23 ரன்கள் எடுத்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் இலங்கைப் பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கி வெறும் 18 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 59* ரன்கள் குவித்து அசால்டாக வெற்றி பெற வைத்தார். அதிலும் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் டி20 உலக கோப்பையில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2ஆவது பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையையும் படைத்தார்.
அப்படி பேட்டிங்கில் அனலை தெறிக்க விட்ட அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்களும் வல்லுநர்களும் “ஹல்க்” என்ற அவரது பட்டப்பெயருடன் அவரை அழைத்து மனதார பாராட்டுகிறார்கள். சமீப காலங்களாகவே டி20 கிரிக்கெட்டில் இப்படி அதிரடியான பேட்டிங் செய்வதுடன் பந்து வீச்சில் அசத்தும் திறமை பெற்றுள்ள அவர் ஆஸ்திரேலியாவின் நல்ல ஆல் ரவுண்டராக கருதப்படுகிறார். குறிப்பாக பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவின் லேட்டஸ்ட் அதிரடி வீரராகக் கருதப்படும் அவர் இப்போட்டியில் தன்னுடைய உச்சகட்ட செயல்பாட்டை வெளிப்படுத்தி மிரட்டியது அனைவரது பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் தான் தம்முடைய முரட்டுத்தனமான பேட்டிங்க்கு காரணமென்று மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் வெளிப்படையாக பேசியுள்ளார். ஆரம்பத்தில் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் தற்போது லக்னோ அணியில் விளையாடும் நிலையில் இது பற்றி போட்டியின் முடிவில் பேசினார்.
அப்போது பேசிய அவர்,“கண்டிப்பாக ஐபிஎல் என்னுடைய கிரிக்கெட்டை மாற்றியுள்ளது. அது என்னுடைய விளையாட்டில் புதுமையை வளர்க்க உதவியது மட்டுமல்லாமல் உலக அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு தரமான பயிற்சியாளர்களுடன் பணியாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த சில வருடங்களாக ஐபிஎல் தொடரில் சில அணிகளுக்காக விளையாடி வருவதால் மனதளவில் தைரியத்தையும் சுழல் பந்து வீச்சை எவ்வாறு அடிக்க வேண்டும் என்ற டெக்னிக்கையும் கற்றுக்கொண்டேன். அந்த வகையில் அது நிச்சயமாக என்னுடைய முன்னேற்றத்தில் பங்காற்றியுள்ளது.
நான் ஒவ்வொரு பந்துக்கும் முன்னங்கால் மற்றும் பின்னங்காலில் நின்று அடிக்க ஒரே நேரத்தில் 2 ஷாட்களை விளையாடும் யுக்தியை பின்பற்றுகிறேன். அதில் ஒன்று போனால் கூட ஒன்று கைகொடுக்கும். இருப்பினும் இந்த போட்டியில் நான் சற்று பதட்டமாகவே விளையாட வந்தேன். ஆனால் களத்துக்கு சென்றதும் நமது அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த வகையில் என்னுடைய ஆட்டம் எங்களுடைய அணியில் இருக்கும் இதர வீரர்களுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி அதிரடியாக செயல்படும் ஸ்பார்க்கை உருவாக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.
இந்த வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்காக 9.20 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் 10 இன்னிங்சில் வெறும் 156 ரன்கள் மட்டும் எடுத்து சுமாராகவே செயல்பட்டார். ஆனால் அந்த அனுபவம் சர்வதேச கிரிக்கெட்டில் உதவுவதாக தெரிவிக்கும் ஸ்டாய்னிஸ் அது ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்து வரும் போட்டிகளில் அபாரமாக செயல்பட உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now