
நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாப்புவ நியூ கினி அணியை போராடி வென்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பாப்புவ நியூ கினி அணியானது சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தது. இருப்பினும் செசே பௌவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார்.
இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் பாப்புவ நியூ கினி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக செசே பௌவ் 50 ரன்களையும், கிப்லின் டொரிகா 27 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஆண்ட்ரே ரஸல், அல்ஸாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இந்த இலக்கை எளிதாக விரட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தது.
அணியின் அதிரடி வீரர்கள் ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் பூரன் 27 ரன்களுக்கும், பிராண்டன் கிங் 34 ரன்களிலும் என சீரான இடைவேளையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ரோவ்மன் பாவெல் 15, ரூதர்ஃபோர்ட் 2 ரன்களிலும் என ஆட்டமிக்க, விண்டீஸ் அணி 97 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனாலும் அதன்பின் இணைந்த ரோஸ்டன் சேஸ் - ஆண்ட்ரே ரஸல் இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.