
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ அரைசதம் கடந்து அசத்திய நிலையில் 77 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜகர் அலி 45 ரன்களைச் சேர்த்தார்.
அதேசமயம் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதன் காரணமாக வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ ரூர்க் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர்.