
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக அபிஷேக் போரல் 58 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 57 ரன்களையும் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணியில் கேஎல் ராகுல், டி காக், மார்கஸ் ஸ்டொய்னிஸ், தீபக் ஹூடா, ஆயூஷ் பதோனி, குர்னால் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடிய நிக்கோலஸ் பூரன் 61 ரன்களையும், அர்ஷத் கான் 58 ரன்களையும் சேர்த்தனர். இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.