
இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 50 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஸத்ரான் உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆஃப்கானிஸ்தான் வீரராக சாதனை படைத்து 129 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து 292 ரன்களை துரத்தி ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 18, ட்ராவிஸ் ஹெட் 0, மிட்சேல் மார்ஷ் 24, மார்னஸ் லபுஸ்ஷேன் 14, ஜோஸ் இங்லிஷ் 0, மார்க்கஸ் ஸ்டோனிஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்கள். அதனால் 91/7 என ஆரம்பத்திலேயே பெரிய சரிவை சந்தித்து ஆஸ்திரேலியாவின் வெற்றி கேள்விக்குறியான போது மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வேகமாக ரன்களை சேர்த்தார்.
குறிப்பாக கேப்டன் கமின்ஸ் சிங்கிள்களாக எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றியதை பயன்படுத்திய அவர் சரவெடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்து வெற்றிக்கு போராடினார். நேரம் செல்ல செல்ல காயத்தை சந்தித்தும் அசராத அவர் தொடர்ந்து பட்டையை கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பவுண்டரி 10 சிக்ஸருடன் இரட்டை சதமடித்து 201 ரன்கள் விளாசி 46.5 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற வைத்தார். அவருடன் பட் கம்மின்ஸ் 12 ரன்கள் எடுத்ததால் ஆஃப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நவீன், ரஷித் கான், ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.