Advertisement

ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் - ஆஷிஷ் நெஹ்ரா!

ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ள ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan December 03, 2023 • 17:11 PM
ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் - ஆஷிஷ் நெஹ்ரா!
ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்துவார் - ஆஷிஷ் நெஹ்ரா! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதற்காக தனித்தனியாக அறிவிக்கப்பட்ட அணிகளில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஓய்வெடுத்து டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாட உள்ளனர்.

அதனால் வாய்ப்பு பெற்ற நிறைய இளம் வீரர்களுக்கு மத்தியில் ரிங்கு சிங் டி20 தொடரில் தேர்வானது மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முதல் முறையாக தேர்வாகியுள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 அடுத்தடுத்த சிக்சர்கள் அடித்து அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமான அயர்லாந்து தொடரிலும் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்றினார்.

Trending


அதைத்தொடர்ந்து 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமான காலிறுதியில் சூப்பர் ஃபினிஷிங் கொடுத்து இந்தியா தங்கப்பதக்கம் வெல்வதற்கு உதவிய அவர் இந்த ஆஸ்திரேலியா தொடரில் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலுமே அதிரடியாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். அப்படி இதுவரை டி20 கிரிக்கெட்டில் மட்டுமே முழுவதுமாக விளையாடியுள்ள அவர் முதல் முறையாக ஒருநாள் கிரிக்கெட்டில் தேர்வாகியுள்ளார்.

எனவே சூர்யகுமார் யாதவ் போல இவரும் டி20 பிளேயராக மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில் ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் தொடரிலும் 50க்கும் மேற்பட்ட சராசரியை வைத்துள்ள ரிங்கு சிங் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடக்கூடிய திறமையை கொண்டிருப்பதாக ஆஷிஷ் நெஹ்ரா பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“4ஆவது போட்டியில் 9, 10ஆவது ஓவரிலேயே அவர் பேட்டிங் செய்ய வந்தது மிகவும் நல்லதாகும். ஏனெனில் இதற்கு முன் அவர் 16, 17, 18 போன்ற ஓவர்களில் களமிறங்கி வெற்றிகரமாக விளையாடியதை அதிக முறை பார்த்துள்ளோம். ஒருவேளை அப்போட்டியில் ரிங்கு அவுட்டாகியிருந்தால் இந்தியா 160 ரன்களுடன் நின்றிருக்கும். இந்த நேரத்தில் ரஞ்சி கோப்பையில் அவர் 50 சராசரியை கொண்டுள்ளார் என்பதை மறந்து விடாதீர்கள். 

அதனாலேயே அவரிடம் ஏதோ ஒரு திறமையை பார்த்த தேர்வுக் குழுவினர் 50 ஓவர் அணியில் முதல் முறையாக தேர்வு செய்துள்ளார்கள். அது இந்திய அணிக்கு முதல் பலமாக அமையும். ஏனெனில் 4வது டி20 போட்டியில் முன்கூட்டியே களமிறங்கிய அவர் தம்மால் நிதானமாக நின்று கடினமான சூழ்நிலைகளை சமாளித்து வெற்றிகரமாக விளையாட முடியும் என்பதை காட்டினார்” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement