
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. சென்சூரியன் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா 405 ரன்கள் அடித்த அதே பிட்ச்சில் 245, 131 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா படுமோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக முதல் இன்னிங்ஸில் கேஎல் ராகுல் தனி ஒருவனாக போராடி 101 ரன்களும் 2வது இன்னிங்ஸில் விராட் கோலி 76 ரன்களும் எடுக்காமல் போயிருந்தால் இன்னும் இந்தியா படுமோசமான தோல்வியை சந்தித்திருக்கும் என்றே சொல்லலாம். அதே போல பந்து வீச்சுத் துறையில் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை தவிர்த்து ஏனைய வீரர்கள் ரன்களை வாரி வழங்கியதும் தோல்வியை கொடுத்தது.
மொத்தத்தில் அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்பட்ட இந்தியா வரலாற்றில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்கும் வாய்ப்பை மீண்டும் நழுவ விட்டது. இந்நிலையில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா தோல்வியை சந்தித்தது பரவாயில்லை ஆனால் கொஞ்சம் கூட போராடாமல் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது ஏமாற்றத்தை கொடுப்பதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.