இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிதிச் சுற்றுக்கும் முதல் அணியாக தகுதி பெற்று வீர நடை போட்டு வருகிறது.
மேலும் தற்போதைய அணியில் அனைவருமே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி சிறப்பான ஃபார்மில் இருப்பதால் நிச்சயமாக 2011 போல இந்தியா இம்முறை கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களுக்கு கவலையாகவே இருக்கிறது.
ஏனெனில் லீக் சுற்றிலேயே ஒரு சில தோல்விகளை சந்தித்தால் பலம் பலவீனங்களை நன்றாக அறிந்து நாக் அவுட் சுற்றில் வெற்றி பெறுவதற்கான பாடங்களை கற்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக வென்றுள்ளதால் பலவீனமே இல்லாத அணியை போல் காட்சியளிக்கும் இந்தியா 2013க்குப்பின் கடந்த 10 வருடங்களாக ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் திடீரென சொதப்பி தோல்வியை சந்திக்கும் கதையை மீண்டும் அரங்கேற்றி விடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.