
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) தொடரின் 8ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திண்டுக்கல் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
இதனையடுத்து களமிறங்கிய திண்டுகல் அணிக்கு ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விமர் குமாரும் 9 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதன்பின் ஷிவம் சிங்குடன் இணைந்த பாபா இந்திரஜித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.
இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் சிங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜித் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷிவம் சிங்கும் 6 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.