டிஎன்பிஎல் 2025: சூர்யா ஆனந்த் ஹாட்ரிக்; ராயல் கிங்ஸை வீழ்த்தி பாந்தர்ஸ் த்ரில் வெற்றி!
நெல்லை ராயல் கிங்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர் சூர்யா ஆனந்த் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தர்.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ராம் அரவிந்த் மற்றும் பாலச்சந்தர் அனிருத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனிருத் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் அரவிந்த் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதுர்வேத், ஷியாம் சுந்தர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் அனிருத்துடன் இணைந்த ஆதிக் உர் ரஹ்மானும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அனிருத் 48 ரன்களிலும், ஆதீக் உர் ரஹ்மான் 36 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதியில் சரவணன் 16 ரன்களையும், குர்ஜப்நீத் சிங் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாத்வ் 3 விக்கெட்டுகளையும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் கிங்ஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. இதில் அஜித்தேஷ் குருஸ்வாமி, சந்தோஷ் குமார் மற்றும் ஹரிஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் அருண் கார்த்திக் - ரித்திக் ஈஸ்வரன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய அருண் கார்த்திக் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் ஈஸ்வரன் 25 ரன்களிலும், நிர்மல் குமார் 8 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, 7 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் அருண் கார்த்திகும் ஆட்டமிழந்தார்.
Also Read: LIVE Cricket Score
அதன்பின் களமிறங்கிய சோனு யாதவ் ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 32 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சூர்ய ஆனந்த் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் ராயல் கிங்ஸ் அணி 18.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்களில் ஆல் அவுட்டானது. பாந்தர்ஸ் தரப்பில் சூர்யா ஆனந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதன்முலம் மதுரை பாந்தர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now