Advertisement

டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!

திருச்சி கிராண்ட் சோழாஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Advertisement
டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
டிஎன்பிஎல் 2025: சோனு யாதவ், ஹரிஷ் அபாரம்; கிராண்ட் சோழாஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 07, 2025 • 11:20 PM

9ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பில்) தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 07, 2025 • 11:20 PM

இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணிக்கு சுஜய் மற்றும் கேப்டன் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுஜய் 12 ரன்களுக்கும், சுரேஷ் குமார் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த வசீம் அஹ்மத் மற்றும் ஜாஃபர் ஜமால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் வசீம் அஹ்மத் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 41 ரன்களிலும், ஜாஃபர் ஜமால் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய ராஜ் குமார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இரண்டு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். அதிலும் குறிப்பாக சரவண குமார், கௌஷிக் மற்றும் செல்வகுமரன் ஆகியோர் சோனு யாதவின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பின் சவாலான இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு கேப்டன் அருண் கார்த்தி மற்றும் சந்தோஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 66 ரன்களையும் சேர்த்தனர். பின்னர் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அருண் கார்த்திக் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களிலும், சந்தோஷ் குமார் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

அவர்களைத் தொடர்ந்து அஜிதேஷ் குருஸ்வாமி 7 ரன்களுக்கும், ரித்திக் ஈஸ்வரன் 9 ரன்களுக்கும், நிர்மல் குமார் 10 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இறுதிவரை களத்தில் இருந்த ஹரிஷ் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாக என்எஸ் ஹரிஷ் தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement