
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடருக்கு முன்னதாக அனைத்து ஐபிஎல் அணிகளும் கலைக்கப்பட்டு வீரர்களுக்கான மெகா ஏலமானது நடைபெறவுள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் வருகிற நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சௌதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.
மேலும் இந்த ஏலத்தில் மொத்தமாக 1574 வீரர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து 574 வீரர்களின் பெயர்களை ஐபிஎல் நிர்வாகம் இறுதிசெய்துள்ளது. இதில் 366 இந்தியர்களும், 208 வெளிநாட்டு வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இந்த ஏலத்தில் சுமார் 81 வீரர்கள் அட்ரூ.2 கோடி பிரிவில் தங்கள் பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதனால் இந்த ஏலத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதேசமயம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரும் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.