
இந்தியாவின் பாரம்பரிய மிக்க உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சி அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று ஆட்டத்தில் மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர் அங்கிரிஷ் ரகுவன்ஷி 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஆயுஷ் மாத்ரே மற்றும் ஹர்திக் தோமர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்த நிலையில், 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 78 ரன்கள் எடுத்த கையோடு ஆயுஷ் மத்ரே தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்திக் தோமரும் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 20 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஸ்ரேயாஸுடன் இணைந்த ஷிவம் தூபேவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், மறுமுனையில் ஷிவம் தூபேவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 114 ரன்களையும், ஷிவம் தூபே 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களையும் சேர்த்தனர்.