
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இன்று விராட் கோலி தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதால், சதம் விளாசி அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சினின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுடன் சதம் விளாச வாய்ப்பு கிடைத்தும் விராட் கோலி சதம் அடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது விராட் கோலி ரசிகர்களின் கரகோஷத்திற்கு நடுவில் களமிறங்கினார். இதன்பின் தொடக்கத்திலேயே தனது ட்ரேட் மார்க் ஷாட்டான கவர்ஸ் திசையில் பவுண்டரி விளாசி ரன் கணக்கை தொடங்கினார்.
இதனால் விராட் கோலி தொடக்கத்திலேயே நல்ல மனநிலையில் இருப்பதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி 67 பந்துகளில் அரைசதம் அடிக்க, கொல்கத்தா மைதானமே உற்சாகத்தில் கொண்டாடியது. இதன்பின் ஆடுகளம் மாறியதால் விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்முனையில் நின்றிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களிலும், கேஎல் ராகுல் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது.