
ருதுராஜ் கெய்க்வாட் தலமையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரை எதிர்கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி நேற்று சென்னை சேப்பாகத்திலுள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியானது அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. இதில் அனுஜ் ராவத் 48 ரன்களையும், தினேஷ் கார்த்திக் 38 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதப்பின் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன்மூலம் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.