
உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தொடர் முயற்சிகளால் ஒரு வழியாக கிரிக்கெட் டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் 128 வருடங்கள் கழித்து முதல் முறையாக கிரிக்கெட் சேர்க்கப்படுவதாக மும்பையில் நடைபெற்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின் ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடைசியாக 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் விளையாடப்பட்ட கிரிக்கெட் அதன் பின் பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டுகளுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் 2028 ஒலிம்பிக்கில் ஐசிசியின் தொடர் முயற்சிகளால் ஸ்குவாஷ், பேஸ்பால் உள்ளிட்ட புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 5 விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்றாக இடம் பிடித்துள்ளது ரசிகர்களையும் வல்லுனர்களையும் முன்னாள் வீரர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அதை விட அந்த அறிவிப்பில் கிரிக்கெட் என்பதை தெரிவுபடுத்துவதற்காக உலகில் நிறைய தரமான நட்சத்திர வீரர்கள் இருந்த போதிலும் இந்தியாவின் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் கமிட்டி பயன்படுத்தியுள்ளது இந்திய ரசிகர்களை பெருமைப்படுத்தும் அம்சமாக அமைந்துள்ளது. இருப்பினும் 25,000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75-க்கும் மேற்பட்ட சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக ஜொலித்து வரும் விராட் கோலியின் படத்தை ஒலிம்பிக் கமிட்டி பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை என்றும் சொல்லலாம்.