
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்த நிலையில், 7 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகின்றன.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் மும்பை, பெங்களூரு, லக்னோ, டெல்லி, ஜெய்ப்பூர், அஹ்மதாபாத் நகரங்களில் மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், ஆர்சிபி அணி வீரர்கள் பெங்களூரு வந்தடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரரும், ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் பெங்களூருவில் உள்ள ஆர்சிபி வீரர்கள் முகாமில் இணைந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் விளையாடும் முதல் ஐபிஎல் போட்டி இதுவாகும்.