
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடாலம் என எண்ணியதாக மனம் திறந்துள்ளார்.
அதில் பேசிய அவர், “நான் 71 சதங்கள் அடித்த பிறகு சச்சினையும் என்னையும் சிலர் ஒப்பிட்டு பேசத் தொடங்கி விட்டார்கள். சச்சின் தான் எனக்கு கிரிக்கெட் விளையாடவே ஊக்கமாக இருந்தவர். சச்சின் ரன்கள் அடிக்கும் போதெல்லாம் நமது வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைப்பு வரும். சச்சின் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை எல்லாம் நம்முடன் ஒப்பிட்டு பார்க்கவே கூடாது.
அவர்களெல்லாம் வேறொரு தரம். சில சமயம் என்னை அவர்களுடன் ஒப்பிடும்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறேன் என்ற நினைப்பு மட்டும் வரும். ஆசியக் கோப்பைக்கு முன்பு வரை நான் சரியாக கிரிக்கெட் விளையாடவில்லை. தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்தேன். இதனால் ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் போது இதுதான் நான் சர்வதேச கிரிக்கெட் விளையாடப் போகும் கடைசி மாதமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் 71ஆவது சதம் அடித்த பிறகு அனைத்தும் மாறிவிட்டது.