
விராட் கோலி தலைமையிலான இந்திய டி20 அணி அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் கலந்துகொண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்று போட்டிகளிலேயே வெளியேறியது. இந்த தொடருக்கான அணித்தேர்வின் போது ஒயிட் பால் கிரிக்கெட்டில் நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்த அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக அணியில் சிறப்பாக செயல்பட்டு வந்த சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரை தாண்டி அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் அதிகளவு பேசப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு திரும்பிய அஷ்வின் மூன்று போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அவரது பந்து வீச்சு இந்த டி20 தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சிறப்பாகவே இருந்தது. இந்நிலையில் பிசிசிஐ-யின் தலைவரான சவுரவ் கங்குலி, விராட் கோலி அஸ்வினுக்கு இந்த டி20 உலகக்கோப்பை தொடரின்போது எவ்வாறு ஆதரவு அளித்தார் என்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.