விராட் கோலி அவரையை ஏமாற்றி வருகிறார் - ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி சோர்வடையவில்லை என்று அவரை அவரே ஏமாற்றி கொண்டிருப்பதாக ஆஸி., முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் அடித்துள்ள விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சதம் கூட அடிக்கவில்லை.
71ஆவது சதத்தை அடிப்பதற்கான அவரது காத்திருப்பு இன்னும் தொடர்கிறது. ஐபிஎல்லிலும் அவர் சரியாக ஆடவில்லை. ஐபிஎல் 15ஆவது சீசனில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 16 போட்டிகளில் வெறும் 341 ரன்கள் மட்டுமே அடித்தார். அவரது தரத்திற்கு இது மிகவும் குறைவான ஸ்கோர்.
டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது. விராட் கோலி தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பதால், அவர் சோர்வடைந்திருக்கிறார். எனவே அவருக்கு ஓய்வு தேவை என்று ரவி சாஸ்திரி உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் அறிவுறுத்தியிருந்தனர். அதேபோலவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விராட் கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து, தனது அனுபவத்திலிருந்து சில பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
கோலி குறித்து பேசிய ரிக்கி பாண்டிங், “இதுமாதிரியான சரிவு அனைத்து வீரர்களுக்குமே ஒரு கட்டத்தில் ஏற்படும். கோலி 10-12 ஆண்டுகளில் பெரிய வீழ்ச்சியை சந்தித்ததில்லை. ஆனால் அவர் எவ்வளவு சோர்வடைந்திருக்கிறார் என்பதை பற்றி ஐபிஎல்லின்போதே அனைவரும் பேசினர்.
எனது அனுபவத்திலிருந்து ஒன்று சொல்கிறேன். நீங்கள் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ சோர்வடையவில்லை என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்கிறீர்கள். காலை எழுந்ததும் பயிற்சிக்கு தயாராவதற்கான வழியை கண்டுபிடிக்கிறீர்கள்.
ஆனால் இவையனைத்துமே நீங்கள் சோர்வடையவில்லை என்று உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் வழிமுறைகள் தானே தவிர, உண்மையில்லை. 2 நாள் தனியாக நிதானமாக அமர்ந்து யோசித்தால்தான் நீங்கள் உண்மையாகவே சோர்வும் களைப்பும் அடைந்திருக்கிறீர்கள் என்பதை உணரமுடியும்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now