-mdl.jpg)
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா வெற்றியாளரை தீர்மானிக்கும் 2ஆவது போட்டியில் அபரமாக செயல்பட்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ராய்ப்பூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத நியூசிலாந்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 15/5 என சரிந்த அணிக்கு அதிகபட்சமாக கிளன் பிலிப்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து 109 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 51 (50) ரன்களும் சுப்மன் கில் 40 (53) ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றியால் 2 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா உலகின் நம்பர் ஒன் அணியாக வந்த நியூசிலாந்தை தோற்கடித்து சொந்த மண்ணில் தங்களை கில்லி என்பதை நிரூபித்தது. மேலும் அக்டோபர் மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்திலும் இந்தியா வெற்றி நடை போடுகிறது.
இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். கடந்த 10 வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் முகமது ஷமி சமீப காலங்களில் டி20 கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஜொலித்து வருகிறார். அவர் வந்த காரணத்தால் இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடிய இளம் எக்ஸ்பிரஸ் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்க்கு இத்தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.