
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர், இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் கஸ் அட்கின்சன், ஸ்காட்லாந்து அணி வீரர் சார்லீ கேசல் ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரு துறையிலும் அபாரமாக செயல்பட்டு அசத்தியதுடன் தொடர் நாயகன் விருதையும் வென்றதன் மூலம் இங்கிலாந்து வீரர் கஸ் அட்கின்சன் பெயர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஸ்காட்லாந்து அணியைச் சேர்ந்த அறிமுக வீரர் சார்லீ கேசலும் தனது அறிமுக ஆட்டத்திலேயே அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.