Advertisement

முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களே இப்படி பேசுவார்கள் - விமர்சனங்களுக்கு வாசிம் அக்ரம் பதிலடி!

முழுமையாக 50 ஓவர்கள் ஃபீல்டிங் செய்தும் கடைசியில் சிக்சருடன் சூப்பர் ஃபினிஷிங் கொடுக்கும் அளவுக்கு அற்புதமான ஃபிட்னஸை கடைபிடிக்கும் விராட் கோலி வேற்று கிரகத்திலிருந்து வந்து விளையாடுவதை போல் அசத்தியதாக வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 20, 2023 • 16:46 PM
முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களே இப்படி பேசுவார்கள் - விமர்சனங்களுக்கு வாசிம் அக்ரம் பதிலடி!
முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களே இப்படி பேசுவார்கள் - விமர்சனங்களுக்கு வாசிம் அக்ரம் பதிலடி! (Image Source: Google)
Advertisement

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற லீக் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயித்த 257 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 48, ஷுப்மன் கில் 53 ரன்கள் விளாசி நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.

அதை வீணடிக்காமல் அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி மிகச் சிறப்பான சதமடித்து 103 ரன்களும் கேஎல் ராகுல் 34 ரன்கள் எடுத்து 41.3 ஓவரிலேயே இந்தியா தொடர்ச்சியான 4வது வெற்றியை பதிவு செய்ய உதவினர். இருப்பினும் அந்த போட்டியில் விராட் கோலி சுயநலத்துடன் சதமடித்ததாகவும் அவருக்கு நடுவர் கடைசி நேரத்தில் ஒயிட் வழங்காமல் சாதகமாக நடந்து கொண்டதாகவும் நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன.

Trending


குறிப்பாக இந்தியாவுக்கு 2 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்ட போது விராட் கோலி 97 ரன்களில் இருந்த சூழ்நிலையில் பவுலர் லெக் சைட் திசையில் வீசிய பந்தை நடுவர் ரிச்சர்ட் கெட்டல்போரக் வேண்டுமென்றே வைட் வழங்கவில்லை என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலையின்றி முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களே இப்படி பேசுவார்கள் என்று வாசிம் அக்ரம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வாரிம் அக்ரம், “இது பொதுவாக நடுவர்கள் செய்யும் வழக்கமான தவறுகளில் ஒன்றாகவே தெரிகிறது. அதே சமயம் அது நிச்சயம் ஒயிட் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது ஒன்றும் செய்யாமல் முட்டாள்தனத்தை நம்பி வாழ்பவர்களுக்கானது. அவர்கள் தான் இதை விமர்சனங்களாக கொண்டு போவார்கள். 

இப்போட்டியில் விராட் கோலி 50 ஓவர்கள் முழுமையாக ஃபீல்டிங் செய்து 90 ரன்களை தொட்டதும் சிக்ஸர்கள் போன்ற பெரிய ஷாட்டுகளை எளிதாக அடிக்கிறார். இது அவருடைய அற்புதமான ஃபிட்னஸ் லெவலை காட்டுகிறது. இவர் வேற்று கிரகத்தைச் சேர்ந்தவர். மேலும் சிலர் ரன்ரேட்டை பற்றி பேசுகின்றனர். 

ஆனால் 15 – 20 ஓவர்கள் மீதம் வைத்து இந்தியா வெற்றி பெறுவது உறுதியான போது சதத்திற்கான வாய்ப்பு இருந்தால் அதை ஏன் எடுக்கக்கூடாது? இந்திய பேட்ஸ்மேன்கள் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள். இந்தியா நல்ல துவக்கத்தை பெற்ற பின்பும் விராட் கோலி சதமடித்தது நேரத்தின் ஒரு விஷயம் மட்டுமே. இப்போது 48 சதங்கள் அடித்துள்ள அவர் சச்சினின் 49 சதங்களை சமன் செய்ய இன்னும் 1 மட்டுமே தொலைவில் உள்ளது” என்று கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement