
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் வரும் டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைத்த மற்றும் விடுத்த வீரர்கள் பட்டியலை அறிவித்தன. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வலுக்கட்டாயமாக வாங்கியது உட்பட சில அணிகள் ட்ரேடிங் முறையில் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின. இதை தொடர்ந்து நடைபெறும் ஏலத்தில் 77 இடத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து 1,166 வீரர்கள் போட்டியிட உள்ளனர்.
முன்னதாக கடந்த 2008ஆம் ஆண்டு சாதாரண டி20 தொடராக தொடங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் பல்வேறு பரிணாமங்களை இன்று விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது. அந்த வகையில் காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப ரசிகர்களை கவர்வதற்காகவும் புதுமையை ஏற்படுத்துவதற்காகவும் கடந்த வருடம் இம்பேக்ட் பிளேயர் எனும் விதிமுறையை பிசிசிஐ அறிமுகப்படுத்தியது.
அந்த விதிமுறைப்படி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவனில் இல்லாத ஒரு வீரரை இன்னிங்ஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மற்றொரு வீரருக்கு பதிலாக நடுவரின் அனுமதியுடன் மாற்றிக் கொள்ள முடியும். அப்படி உள்ளே வரும் வீரர் மற்றவர்களைப் போலவே முழுமையாக பவுலிங் மற்றும் பேட்டிங் செய்யலாம் என்ற விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.