
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்தில் உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6ஆவது தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலின் 8ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த அப்துல் சமத், இன்னிங்ஸின் கடைசி ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
அதன்படி இப்போட்டியில் லக்னோ அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில், ராஜஸ்தான் தரப்பில் இன்னிங்ஸின் கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட அப்துல் சமத் ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் சிக்ஸர் அடித்த நிலையில், ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் அபாரமான சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அசத்தினார்.