
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ரயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இன்றைய போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக விளையாடாததை அடுத்து ரியான் பாராக் கேப்டனாக செயல்படுகிறார். மேற்கொண்டு இளம் அறிமுக வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் லெவனில் இடம்பிடித்த வீரர் எனும் தனித்துவ சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரனும் 11 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்தும் 3 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்துள்ள ஐடன் மார்க்ரம் மற்றும் ஆயூஷ் பதோனி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.