
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சேப்பாக்கத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் முதல் இரண்டு ஓவர்களில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி மைதானத்தின் தன்மையைச் சோதித்தனர். அதன்பின் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கிய ரச்சின் ரவீந்திரா பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளினார்.
அவருக்கு துணையாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய ரச்சின் ரவீந்திராவும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் முதல் 5 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்களைக் குவித்தார். அதன்பின் பவர்பிளேவின் கடைசி ஓவரை வீச குஜராத் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் வந்தார்.