
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது லண்டனில் உள்ள லார்ஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னிலும், கஸ் அட்கின்சன் 118 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 15 ரன்னிலும் என விகெட்டை இழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 427 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன், கஸ் அட்கின்சன் 118 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடி வரும் இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.